Face Book Like Button

My Great Web page

Friday, December 7, 2018

சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் - டி.எஸ். பாலையா


சிரிப்பால் சிறந்தவர்கள் ! சிந்திக்க வைத்தவர்கள் !
தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத்திலிருந்தே, நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஒரு தனியிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. சிரிப்பில்லையேல் சிந்தனையில்லை; சிந்தனையில்லையேல் சிறப்படைய வழியில்லை! இக்கருத்தை மனதில் கொண்டுதான் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை, திரைக்கதையில் நகைச்சுவைக்கும் தனியிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள் ! அப்படி நம்மைச் சிரிக்க வைத்தவர்களை, நம் சிந்தையில் இருத்திச் சிறக்கவைக்க வேண்டும் என்பதே இந்தக் குறிப்பின் நோக்கம்.
1936 முதல் இன்று வரை நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் பட்டியல் இதோ ! டி.எஸ். பாலையா , என்.எஸ்.கிருஷ்ணன், டி மதுரம், டி ஆர் ராமச்சந்திரன் , டி.எஸ்.துரைராஜ், ஜே பி சந்திரபாபு, காளி என் ரத்தினம், ப்ரண்ட் ராமசாமி, எம்.சரோஜா, காகா ராதாகிருஷ்ணன் , கே..தங்கவேலு, சச்சு , சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, சோ ராமஸ்வாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன், வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி , வெண்ணிற ஆடை மூர்த்தி ,ஜனகராஜ், குமரிமுத்து, செந்தில், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , விவேக், எஸ்.எஸ்.சந்திரன், சார்லி, வடிவேலு, வையாபுரி, சந்தானம் ஆகியோர் . ஒவ்வொரு வாரமும் ஒருவரைக் குறித்து இத்தொடரில் நாம் அறிந்ததை வெளியிட உத்தேசித்திருக்கிறோம்.
நினைவுகளை எட்டும் வரை இழுத்துச் சென்று, இணையத்தில் இணைந்திருக்கும் எழுத்துக் கருவூலங்களின் எல்லையற்ற துணையையும் கைக்கொண்டு, முடிந்தவரை அனைத்து நகைச்சுவை நடிகர்களையும் இங்கே நினைவுகோர முயற்சித்திருக்கிறோம் !. இதோ தொடருகிறது , சிரிப்புச் சிகரங்களைக் குறித்த ஒரு சிறப்புப் பார்வை !
----Rajesh Venkatasubramanian, Krishnamurthi Balaji

சிரிப்பால் சிறந்தவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் - 1

டி.எஸ். பாலையா: 1914இல் பிறந்த இவர், திரையுலகில் வாழ்ந்த காலம் 1936 முதல் 1972 வரை ஆகும். ‘யதார்த்தம் பொன்னுசமி பிள்ளை அவர்களின் மதுரை பாலகானம் டிராமா கம்பெனியில் தனது கலைவாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1946 இல் சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்த பெருவாரியான படங்களில் இவருக்கு வில்லன் வேடமே கிடைத்து வந்தது.
இடையில் சில காலங்கள் இருண்ட காலமாக இருந்த போதிலும் , சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகி தாம் தயாரித்த 'சித்ரா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவைத்து அவரது வாழ்வை ஒளிமயமாக்கினார் என்பது அறிவு. தொடர்ந்து 1956 இல் 'வெறும் பேச்சல்ல' என்ற படத்தில் கதாநாயகி பத்மினிக்கு ஜோடியாக, கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது . வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்ற எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவர். வில்லன் பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க படங்கள் அம்பிகாபதி (1947), மதுரை வீரன், பார்த்திபன் கனவு போன்றவை. எண்ணற்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்று, ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர் இவர். அண்மைக்காலத்திலிருந்து நோக்கினோமெனில், மறக்க முடியாத இவரது படங்கள் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, மணமகள், ஓர் இரவு, வேலைக்காரி போன்றவையாகும். இரு சகோதரர்கள், வாழ்க்கைப் படகு, பாக்தாத் திருடன், காத்தவராயன், காலம் மாறிப்போச்சு , ஏழை படும் பாடு, மகனே நீ வாழ்க போன்றவை இன்னும் சில குறிப்பிடத்தக்க படங்கள். .
இவர் போடாத வேஷங்களில்லை; நடிக்காத கதாபாத்திரங்களில்லை. 'பாமா விஜயம்' படத்தில், சிரிப்பினூடே சிந்தனையைப் புகுத்தும் இவரது நடிப்பை யாராலும் மறக்க முடியாது. 'வரவு எட்டணா' பாட்டு ஒன்று போதும்! காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, போன்ற படங்களில் அவரது நகைச்சுவை காலத்தால் அழியாத காவியம் என்றே கூறலாம் ! நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடிப்பது பெரிதல்ல. வசனங்களை 'டைமிங்' தவறாமல் சொல்லுவதுதான் பெரிது. பாலையா அவர்கள் அதை எத்தனை திறம்படச் செய்கிறார் என்பது அவரது படங்களைப் பார்த்தாலே புரியும் !
ஊட்டி வரை உறவு படத்தில் பாலையாவுடன் நாகேஷ் : டைமிங் வசனம்: "உள்ள எறங்கிப் பாரு தெரியும்!". முகபாவங்களும் வசன உச்சரிப்பும் அபாரம் !
இயல்பான நகைச்சுவை அவருக்குக் கை வந்த கலை ! 'காதலிக்க நேரமில்லை படத்தில், 'டே செல்லப்பா, எலும்புதான் இருக்கு' என நாகேஷை அவர் கடிந்து கொள்வது! அடுத்து ரவிச்சந்திரன் மற்றும் முத்துராமனிடம் அவர் குழைவது! அத்தனை காட்சிகளும் அருமையிலும் அருமை ! ஒரே காட்சியில் முகபாவங்களை மாற்றி மாற்றிக் காட்ட அவரையன்றி ஒருவராலும் இயலாது .
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது இவர் காட்டும் முகபாவங்கள் மறக்க முடியாத ஒன்று . அதைக் கீழே கொடுத்துள்ள காணொளியில் காணுங்கள் :

via ytCropper

திருவிளையாடல் படத்தில் வெளிநாட்டுப் பாடகர் பாத்திரத்தில் நடித்த பாலையா அவர்கள் பாண்டிய மன்னனுக்கு சவால் விடும் காட்சி மனதில் நிற்கும் ஒன்று . 'ஒரு நாள் போதுமா' என்று பாடுவதிலாகட்டும், பிறகு மன்னன் தரும் பரிசை மறுத்து, அகங்காரத்துடன் பாண்டிய நாட்டுப் பாடகர்களைப் போட்டிக்கு அழைக்கும் வேகத்திலாகட்டும், அவரது நடிப்பும் முகபாவங்களும் தனி முத்திரை பதித்தன! காட்சியைக் கீழே பாருங்கள் :
இப்படி அவரது திறமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் ! எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் வெகு சில நடிகர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் திரு.பாலையா அவர்கள் . அன்னாரைப்பற்றி ஒரு நான்கு வரிகள் எழுத இயன்றதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம் .
--K.Balaji







Thursday, August 3, 2017

ஆடிப்பெருக்கிற்கோர் அறிமுகம் !

ஆடிப்பெருக்கிற்கோர் அறிமுகம் !




பொன்னியின் செல்வன் 

அத்தியாயம் 1 - ஆடித்திருநாள்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ...

வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

      “வடவாறு பொங்கி வருது
      வந்து பாருங்கள், பள்ளியரே!

 வெள்ளாறு விரைந்து வருது

      வேடிக்கை பாருங்கள், தோழியரே!

 காவேரி புரண்டு வருது

      காண வாருங்கள், பாங்கியரே!
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

வேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.

ஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது “ஆ! ஆ!” என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்...


நன்றி : 
கதை: கல்கி
படம் : இணையம் 

Wednesday, August 2, 2017

மாறாத தாயுள்ளம்




மாறாத தாயுள்ளம்

மறவாது என்நெஞ்சம்!



நீ பிறிந்தா யென்றறிந்த  
கணமதிலே என்னுளமும்
எனைவிட்டுப் பிறிந்துந்தன் 
அருகடைந்து நின்றதுவே!



உளமாரத் தாயாக 
நீயெனக்குச் செய்ததெலாம்
உளமார நானென்றும்
நினைக்கின்றேன் நீயறிவாய்! 



பிள்ளைப் பிராயத்தில் 
என்றில்லை இறுதிவரை 
தான்பெற்ற மகவாகத் 
தானென்னை நீநினைத்தாய்!
வளர்ந்தபின் உன்னுடனே
நானிருந்த காலங்கள் 
கணக்கினிலே தான் குறைவு,
மனத்தினி லேயல்ல! 



இசைதன்னை யேயெனக்கு
உணவாகப் புகட்டிவிட்டாய்!
வசையென்றும் உன்வா
யிருந்துவந்து கேட்டதில்லை! 



வாசலிலே நீவரைந்த 
கோலங்கள் என்றென்றும் 
வரிசை கலையாத 
புள்ளிகளா யென்னுளத்தில் 
இன்றும் நிலைத்திருந்து 
இனிமை பரப்பிடுதே
இன்னிசைகள் பாடிடுதே! 



'கருணாலயநிதி'யாய்
நீயிசைத்த கானங்கள்
கனிவாய் இன்றுவரை 
இதயத்தில் இசைக்கோலம்! 



தாய்ப்பசுவைத் தொடர்கின்ற
கன்றெனவே நானுன்னை 
என்றும் தொடர்ந்திருந்தேன்
ஏழாம் பிராயம்வரை! 
வளர்ந்து கல்லூரிப் 
பருவமதில் வந்தடைந்தேன்
பின்னும்நின் வாசலையே
பெருமையுடன் நின்மகவாய் !



சோறும் மோரும்நீ 
தந்ததென்றும் உச்சியிலே
சுகமாக மனம்குளிர
வைத்ததுண்டு உண்மையிலே!



பலநாட்கள் நள்ளிரவில் 
வீடுவந்து சேரும்வரை
விழிசோரா திருந்தெனக்கு
இன்னமுதம் ஈந்ததுண்டு!



என்றென்றும்  அந்நினைவு
எனைவிட்டு அகலாது!



பண்டிகைகள் பூசனைகள்
ஆகும்நன் னாட்களெலாம்
இன்றும் உனதன்புக்
குரலதனைக் கேட்கின்றேன்!



நானேமறந்திடும் என்
நட்சத்திரத் திருநாளை
நினைவாக முடிந்துவைத்து
நீயென்னை வாழ்த்திடுவாய்!



இறுதிவரை இந்நிகழ்ச்சி
இடறிச் சென்றதில்லை! 



இன்றைக்கும் என்றைக்கும் 
என்தாயாய் எனில்நிறைந்து
நிற்கின்றா யென்பதனை 
நான்மட்டும் தானறிவேன்! 



நலம்புரிந்தே யுன்மக்கள்
வளர்ந்து பெருகிடவே
வானுலகி  லேயிருந்து
வாழ்த்தி யருள்புரிவாய்! 
நினைந்து நலம்பெறுவோம்!



--K.Balaji
  Aug 02 2017

Monday, June 27, 2016

Please let him not....

World Senior Citizens Day ! :-( Please let him not.... Please let him not walk towards Old Age Home ! Have a little concern! Have a review of the fruitful days of youth you spent with him! Please let him not walk towards Old Age Home! When he had strength he gave all his support to his kith and kins! and now it is his time of need and he needs all your support! Not by way of wealth and valuables ! Never he would ask for it! He just needs a little care, kind and courtesy! Please let him not walk towards Old Age Home! It is all there in an affordable reach of your hands ! Let your mind open to get him all those little wants! Please let him not walk towards Old Age Home! ---K.BALAJI —

பிரிவின் சுமைகள் !


பிரிவின் சுமைகள் !

'கட்டிக் கொடுத்த சோறும்
 சொல்லிக் கொடுத்த பாடமும் 
எத்தனை நாளைக்குக் கூட வரும்
 என்று சொல்வதுண்டு!

என்னைப் பொறுத்த வரையில்,
 என்னை வளர்த்தெடுத்த தாய், நீ
கட்டிக் கொடுத்த சோறு
 இன்னும் என்
கூட வந்து மணக்கிறது.

 நீ சொல்லிக் கொடுத்த
 ஒவ்வாரு சொல்லும்
 இன்றுவரை
 என் நினைவில்
 துணைநின்று
 வழி நடத்திச்
 செல்கிறது!
 இதுதான் உண்மை!

 என்னைப் பெறவில்லை
 என்றாலும்,
சுமந்தாய் நீ மனதில்!
 என் காலில் விஷக்கல்
குத்திய கதைகள் 
இன்னும் மனதில் ரணம்!

ஒவ்வாரு முறையும்
 எனக்காக நீ நடந்த
நடைகள் எத்தனை எத்தனை !

 'இன்னுயிரைத்
 தன்னுயிர் போல் மதித்தல்'
 என்பதை
 உன்வரையில் நீ
உண்மையாக்கிய கதைகள்
 எத்தனை நான் கண்டு,
 மனதில் கொண்டேன் !

 வசைச்சொற்கள்
 உன்வாயிருந்து
 வந்தபோதும்
 அதை நான்
 இசையாகத்தான் கண்டேன்!
 ஏனெனில்
 நான் அறிவேன்,
 அடுத்த கணமே
 அவை உன்
 மனம்விட்டு அகலும்
என்பதை !

அவை என்னைப்
புடம் போட்ட பொன்னாக
மாற்றும் என்பதை!

பிரிவின் சுமைகள்
கனக்கின்றன!
காலம் அதனை
எளிதாக்கும்!
நினைவை இசையாக்கும்
குயிலாய் என்றும்
மனதில் நிறைகின்றாய்
நீ என் தாய் !
நீ என் தாய் !


 --பாலாஜி
04.05.16

Tuesday, May 3, 2016

பிரிவின் சுமைகள்

                           சுமையே சுகம்!

'கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்குக் கூட வரும் என்று சொல்வதுண்டு! என்னைப் பொறுத்த வரையில், என்னை வளர்த்தெடுத்த தாய், நீ கட்டிக் கொடுத்த சோறு இன்னும் என் கூட வந்து மணக்கிறது. நீ சொல்லிக் கொடுத்த ஒவ்வாரு சொல்லும் இன்றுவரை என் நினைவில் துணைநின்று வழி நடத்திச் செல்கிறது! இதுதான் உண்மை! என்னைப் பெறவில்லை என்றாலும், சுமந்தாய் நீ மனதில்! என் காலில் விஷக்கல் குத்திய கதைகள் இன்னும் மனதில் ரணம்! ஒவ்வாரு முறையும் எனக்காக நீ நடந்த நடைகள் எத்தனை எத்தனை ! 'இன்னுயிரைத் தன்னுயிர் போல் மதித்தல்' என்பதை உன்வரையில் நீ உண்மையாக்கிய கதைகள் எத்தனை நான் கண்டு, மனதில் கொண்டேன் ! வசைச்சொற்கள் உன்வாயிருந்து வந்தபோதும் அதை நான் இசையாகத்தான் கண்டேன்! ஏனெனில் நான் அறிவேன், அடுத்த கணமே அவை உன் மனம்விட்டு அகலும் என்பதை ! அவை என்னைப் புடம் போட்ட பொன்னாக மாற்றும் என்பதை! பிரிவின் சுமைகள் கனக்கின்றன! காலம் அதனை எளிதாக்கும் நினைவை இசையாக்கும் குயிலாய் என்றும் மனதில் நிறைகின்றாய் நீ என் தாய் ! நீ என் தாய் ! --பாலாஜி
04.05.16